வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம்!
ஆன்லைன் வணிகதளமான ஃப்ளிப்கார்ட்டில், ரூ.1 லட்சம் மதிப்பிலான சோனி டிவியை ஆர்டர் செய்த நபருக்கு பொருளை மாற்றி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் சிறிய பொருளில் இருந்து எந்த பொருளாக இருந்தாலும், நேரடியாக கடைக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
பண்டிகை காலம் வந்தாலே இ-வணிக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் சலுகைகளையும், ஆஃபர்களையும் அறிவித்து வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே தங்களது விருப்பமான பொருள்களை ஒன்லைனில் ஆர்டர் செய்கின்றனர்.
அந்தவகையில், ‘Bigg Billion days’ என்ற பெயரில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பை பார்த்து பலரும் ஆர்டர் செய்தனர்.
இந்நிலையில், ஆர்யன் என்பவர் உலகக்கோப்பை தொடரை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று ஃப்ளிப்கார்ட்டில் அலசி ஆராய்ந்து சலுகை விறபனையில் இருக்கும் டிவி ஒன்றை பார்த்துள்ளார்.
இதனுடைய விலையானது ரூ.1 லட்சமாக இருந்தாலும் சோனி டிவியை ஒன்லைன் தளமான Flipkart -ல் ஆர்டர் செய்து பணத்தை அனுப்பினார். பின்பு, சோனி டிவி அதற்கான பெட்டியில் பத்திரமாக பேக் செய்யப்பட்டு வீட்டிற்கு டெலிவரி ஆனது.
இதனைத்தொடர்ந்து, சோனி நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர் ஆர்யனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து பெட்டியை திறந்த போது ரூ.1 லட்சம் ,மதிப்பிலான சோனி டிவி இல்லாமல் சாதாரண தாம்சன் டிவி இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்யன், ஃப்ளிப்கார்ட்டை பலமுறை தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை.
இதனால், அதனுடைய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து நியாயம் கேட்டுள்ளார். அதனை, கவனித்த ஃப்ளிப்கார்ட் ஆர்யன் குறையை தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளது.