விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழா: சென்னையில் குவிந்த தொண்டர்கள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் அம்பேத்கர் சுடர் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி விருது வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சான்றோருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
2022-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் இன்று மாலை நடக்கிறது. விழாவில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, செல்லப்பன், தெகலான் பாகவி, கா.ராசன், மறைந்த எழுத்தாளர் ஜவகர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்கள் துரை ரவிக்குமார் எம்.பி., சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, சென்னை மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, ஆதவன், இரா.செல்வம், அம்பேத் வளவன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பஸ், வேன்கள் மூலம் சென்னையில் குவிந்து உள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் புதுடெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொள்கிறார். அனைத்து பொறுப்பாளர்களும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.