விபத்தில் இறந்த மகன்… உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

October 22, 2022 at 5:29 pm
pc

கோவையில் கிணற்றுக்குள் மூழ்கி மகன் பலியான துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் சிறுவாணி அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். இந்தநிலையில் தங்களது ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் சங்கர் ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நந்தினி, சங்சீவ் சங்கர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website