வீடு, கார் தருவதாக வாக்குறுதி; 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரி இயக்குநருக்கு வக்கீல் நோட்டீஸ்
‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ பிரபலம் பொம்மன் மற்றும் பெல்லி இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அந்த வக்கீல் நோட்டீசில், குறும்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் இருவருக்கும் தேவையான நிதி உதவி, வீடு, கார் உள்ளிட்டவற்றை வழங்குவதாக இயக்குநர் உறுதியளித்தார். ஆனால் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிதியுதவியை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் எடுத்துக் கொண்டதாகவும் இருவரும் குற்றம் சாட்டினர்.
“படப்பிடிப்பின் போது பொம்மனுக்கும் பெல்லிக்கும் நிதியுதவியும், பெல்லியின் பேத்திக்கு கல்வி உதவியும் தருவதாக கார்த்திகி கோன்சால்வ்ஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த வாக்குறுதியை மீறுகிறார். படத்தின் வருவாயில் ஒரு பகுதியைக் கூட அவர்கள் பொம்மன் மற்றும் பெல்லிக்கு கொடுக்கத் தயாராக இல்லை” என்று வழக்கறிஞர் பிரவீன் ராஜ் கூறினார்.
ஆனால், பொம்மனும் பெல்லியும் ஏற்கனவே சம்பளத் தொகையைப் பெற்றுவிட்டனர் என இப்படத்தை தயாரித்த சிக்யா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.