வீட்டிலேயே இயற்கையாக குங்குமம் தயாரிக்கலாம் வாங்க …!!
குங்குமம் என்பது கோவில்களில் தெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தக் கூடிய மிகவும் சிறப்பு மிகுந்தவை. கல்யாண பெண் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது வழக்கம். அதனால் குங்குமம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ஒரு பொருள்.
பயன்பாட்டில் அதிகம் உள்ள பொருளாக இருந்தாலும் கூட கடைகளில் வாங்கும் குங்குமம் பயன்படுத்துவதால் நெற்றியில் அரிப்பு, எரிச்சல் மற்றும் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய வீட்டிலேயே குங்குமம் தயார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை – 3 பழம்
வெண்காரம்- 25 கிராம்
படிகாரம்-25 கிராம்
மஞ்சள் தூள்-50 கிராம்
நல்லெண்ணெய்-சிறிதளவு
செய்யும் முறை
1.முதலில் மூன்று எலுமிச்சை பழங்களை நன்கு சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் வெண்காரம், படிகாரம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையுடன் எந்த விதமான தண்ணீர் சார்ந்த பொருட்களைச் சேர்க்கக் கூடாது.
3. கலந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு மாவு போன்ற பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
4.கலந்த கலவையை நன்றாக எலுமிச்சை சாறின் ஈரப்பதம் குறையும் வரை ஆறவைக்கவும்.
5.அதற்குப் பிறகு, எட்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். கலவையை இரண்டிலிருந்து முன்று நாட்கள் வரை வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.
6. கலவையில் ஈரப்பதம் குறைந்த பின், குங்குமம் பதத்திற்கு வந்த பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம்.