வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய போலீஸார்..

December 28, 2023 at 7:19 am
pc

சென்னை: சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்ததால் மொத்த போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும், வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அண்மைக்காலமாக பல நகரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. நேற்று மும்பையில் ஆர்பிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட பல வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வங்கிகளில் அதிக அளவில் மோசடி நடைபெறுவதாகவும், இதற்கு பொறுப்பேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யாவிட்டால் இந்த வங்கிகளில் குண்டு வெடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அனைத்து வங்கிகளிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில் அது பொய் மிரட்டல் என்பது தெரியவந்தது.

இந்த சூழலில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இன்று மாலை ஒரு இ-மெயில் வந்தது. அதில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை உட்பட 30 இடங்களை சுட்டிக்காட்டி அங்கெல்லாம் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸாரும் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதிகள் அனைத்தும் மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. பல இடங்களில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website