வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ அழைப்பில் பேசிவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்!

August 10, 2022 at 10:43 am
pc

* செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞான பாக்கியபாய்.

* வீடியோ அழைப்பில் பேசும் போது கணவருடன் சண்டை ஏற்பட்டதால், ஞான பாக்கியபாய் எடுத்த விபரீத முடிவு

வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ அழைப்பில் பேசும்போது ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞான பாக்கியபாய் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவரிடம் ஞானபாக்கியபாய் அடிக்கடி செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஞான பாக்கியபாய் கணவரிடம் பேசியுள்ளார். 

அப்போது திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த ஞான பாக்கியபாய் உடனே செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் செந்தில், மனைவியிடம் பேச மீண்டும், மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுத்து பேசாததால் பதற்றமடைந்த செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

உடனே அவர்கள் ஞான பாக்கியபாய் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஞானபாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீடியோ அழைப்பில் கணவரிடம் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்தாயார் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website