வேகமாக ஓடி வந்து இந்திய வீரர்களின் ஷூக்களை துடைத்த நபர்! ஹீரோ என கொண்டாடும் ரசிகர்கள்
ஈரமான ஷூக்களுடன் சிரமப்பட்ட வீரர்களுக்கு உதவிய இந்திய அணி நிபுணர்
இந்திய வீரர்களின் ஷூக்களை சுத்தம் செய்ததால் ஹீரோவாக கொண்டாடும் ரசிகர்கள்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களின் ஷூக்கள் மழையால் நனைந்ததால், பயிற்சியாளர் ஓடி வந்து துடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அடிலெய்டில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
மழைக்கு பின்னர் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் செய்ய வந்தபோது மைதானம் ஈரமாக இருந்தது. இதனால் வீரர்கள் ஓடுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் இந்திய வீரர்களின் ஷூக்கள் ஈரமாக இருந்தது.
அப்போது நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து, தன் கையில் வைத்திருந்த பிரஷை கொண்டு வீரர்களின் ஷூக்களை துடைத்தார். அவரது இந்த செயல் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்னர் வீரர்களால் மைதானத்தில் வேகமாக ஓட முடிந்தது.
அந்த நபர் தான் இந்திய அணியில் Throwdown Specialist ஆக இருக்கிறார். தனது சிறப்பான பயிற்சியால் இந்திய அணி வீரர்களை இவர் மெருகேற்றியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் முக்கிய உறுப்பினராக திகழும் ராகு ராகவேந்திரா, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இருக்கிறார். இவரை பற்றி தேடிய ரசிகர்கள் தற்போது இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.