வேலைவாய்ப்பு பெயரில் நடக்கும் மோசடிகள்: எச்சரிக்கை பதிவு!
இன்றைய டிஜிட்டல் உலகில், வேலைவாய்ப்பு சந்தையில், பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்த மோசடிகள் போலி வேலைவாய்ப்பில் துவங்கி வீட்டில் இருந்து வேலை என விதவிதமாய், வித்தியாசமாய் நீண்டுகொண்டே செல்கிறது. எதிர்பாராத விதமாக, வேலை தேடும் பலரும், இது போன்ற மோசடி குறித்து தெரியாமல், தங்களது நேரம், பணம், தனிப்பட்ட தகவல்களை இழக்கின்றனர். மோசடி வேலைவாய்ப்புகளில் விழாமல் இருக்க, விழிப்புணர்வுடன், சரியான வேலைவாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்களேன்.
வேலைக்கு ஆட்கள் தேவை என்ற என்ற பெயரில் மோசடி நீண்டகாலமாக அரங்கேறினாலும், இணையதளம், சமூகவலைதள பயன்பாடு அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், மோசடி செய்வது மேலும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இணைய குற்றவாளிகள், போலியான இணையதளம், இமெயில் முகவரி உருவாக்கி கைவரிசை காட்டுவது சாதாரணமாகி விட்டது. போலி நேர்காணல் நடத்தி தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்து கொள்வதுடன், பின்னணி சரிப்பார்ப்பு, பயிற்சிக்கு என குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து ஏமாற்றுவது நடக்கிறது.குறிப்பாக, சமீபத்தில் டிகிரி முடித்துள்ள பட்டதாரிகள், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசிகள் ஆகியோர் அதிகளவில் மோசடி வலையில் சிக்குகின்றனர்.
போதிய அனுபவம் இல்லாதது, எப்படியாவது ஒரு வேலையில் சேர வேண்டுமென ஆவலில் இருக்கும் அவர்களை மோசடி பேர்வழிகள் பயன்படுத்தி கொள்கின்றனர். பொதுவான வேலைவாய்ப்பு மோசடி வகைகள் : 1. வீட்டில் இருந்து வேலை மோசடி : வீட்டில் இருந்து வேலை செய்ய அரிய வாய்ப்பு, தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற பெயரில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதில் சேர பயிற்சிக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டுமென கூறுவர்.
கட்டணம் செலுத்திய பின் வேலையும் கிடைக்காது. பணத்தை திரும்ப பெறவும் இயலாது. 2. போலி வேலைவாய்ப்பு : போலியான இணையதளங்களை உருவாக்கி, அதில் வேலைவாய்ப்பு இருப்பதாக மோசடி பேர்வழிகள் விளம்பரம் செய்வார்கள்.
இதில் விண்ணப்பிக்க அல்லது பின்னணி குறித்து ஆராய குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டுமென கூறுவர். இன்னமும் சில பேர், விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற போலி நேர்காணல்களை கூட நடத்துவர்.மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி ?இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் பல விதங்களில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன . அவற்றில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.நம்ப முடியாத சலுகைகள் :வேலை தொடர்பான விளம்பரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக சம்பளம், குறைவான தகுதி, நேரம், வேலைக்கான உத்தரவாதம் ஆகியவற்றை உறுதியளிப்பதாக இருந்தால், அது ஒரு மோசடியாக இருக்கலாம். நிறுவனத்தை ஆராய்தல் :நிறுவனமும் வேலை வாய்ப்பும் முறையானதா என்பதைச் சரிபார்க்க, நிறுவனத்தின் இணையதளம், சமூகவலைதள பக்கங்கள் மற்றும் பின்னூட்டங்களை பார்ப்பது அவசியம்..
இணையதளம் தொழில் சார்ந்ததாகத் தோன்றினால் அல்லது தொடர்பு விவரங்கள் இல்லாவிட்டால், அது பொய் நிறுவனமாக இருக்கலாம்.முன்கூட்டியே கட்டணம் செலுத்தல்:உண்மையான நிறுவனங்கள், பின்னணி சரிபார்ப்பு அல்லது பயிற்சித் திட்டம் போன்ற எதற்கும் முன்கூட்டியே பணம் செலுத்தும்படி உங்களிடம் கேட்க மாட்டார்கள். ஒரு நிறுவனம் முன்கூட்டியே பணம் கேட்டால், அது ஒரு மோசடியாக இருக்கலாம்.தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்தல்:ஆதார், வங்கி கணக்கு எண் அல்லது பான் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை மோசடி நபர்கள் கேட்கலாம். நிறுவனத்தின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருப்பின், இதுபோன்ற தனிப்பட்ட தகவலை வழங்குவதில் கவனமாக இருங்கள்.போலி நேர்காணல் குறித்து எச்சரிக்கை :நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்காத நிறுவனங்களிடம் இருந்து இமெயில் வந்திருந்தால் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மோசடி பேர்வழிகள், வேலை தேடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள, போலி மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.
ஆன்லைனில் போலி நேர்காணல்களை நடத்துவர். அல்லது பின்னணி ஆராய்வது அல்லது பயிற்சி திட்டத்திற்கு பணம் செலுத்தும்படி நம்ப வைப்பர். இலக்கண மற்றும் எழுத்துப்பிழையை கவனியுங்கள் :பெரிய நிறுவனங்கள், தங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இமெயில்களை சரிபார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரம் எடுப்பார்கள். வேலை இடுகை அல்லது மின்னஞ்சலில் தவறான, இலக்கண, எழுத்துப் பிழைகள் இருப்பின், அது போலியானதாக இருக்கலாம்.தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி ?வேலைவாய்ப்பு மோசடியில் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவெனில், அவை உங்கள் தனிப்பட்ட தகவலை ஆபத்தில் ஆழ்த்தலாம்.
மோசடி பேர்வழிகள் உங்கள் ஆதார், வங்கிக் கணக்குத் தகவல் அல்லது பிற முக்கியத் தகவல்களை வேலைவாய்ப்புக்கு தேவை என கேட்கலாம். பின்னர் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி உங்கள் பிற வகையான மோசடிகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க, எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். உங்கள் தனிப்பட்ட ஐடிகள் அல்லது வங்கிக் கணக்குத் தகவலை ஒருபோதும் வழங்காதீர்கள்.
உங்கள் தனிப்பட்ட தொடர்புத் தகவலைத் பாதுகாப்பாக வைத்திருக்க, வேலைகளுக்கு விண்ணப்பிக்க தனி மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம். மோசடியால் பாதிக்கப்பட்டோர் செய்ய வேண்டியது என்ன? :நீங்கள் வேலைவாய்ப்பு மோசடியால் ஏமாற்றப்பட்டவர்கள் எனில், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரைவாகச் செயல்பட வேண்டியது அவசியம். அங்கீகரிக்கப்படாத கட்டணம் தொடர்பாக புகாரளிக்க, உடனடியாக உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை அறிய, இண்டீட் (Indeed), கிளாஸ்டோர் (Glassdoor), LinkedIn( லிங்க்டுஇன்) போன்ற புகழ்பெற்ற வேலைவாய்ப்பு இணையதளங்களை பயன்படுத்தலாம். இந்த இணையதளங்கள் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்கும், வேலை வாய்ப்புகள் சட்டப்பூர்வமானவை என்பதை உறுதி செய்வதற்கும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.