14 வயது சிறுவர்கள் பாலியல் மிரட்டல் கொடுக்கின்றனர்: இளம் நடிகை பரபரப்பு புகார்.!
இளம் இந்தி நடிகை சிம்ரன் புதரூப். இவர் நடித்த பாண்டியா ஸ்டோர் தொலைக்காட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் இவர் தனக்கு பாலியல் மிரட்டல் வந்துள்ளதாக அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாண்டியா ஸ்டோர் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சிம்ரன் புதரூப்பை பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாகவும், கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து சிம்ரன் புதரூத் கூறும்போது, “நான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதை சிலரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு எதிராக ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தன.
ஆனால் தற்போது அது எல்லை மீறி விட்டது. என்னை பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். கொலை செய்வோம் என்றும் மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். அவதூறாக பேசுகிறார்கள். இதனால் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளேன்.
என்னை மிரட்டுபவர்கள் 14 வயது சிறுவர்கள். அவர்களுக்கு பெற்றோர்கள் கல்விக்காக வாங்கி கொடுத்துள்ள மொபைல் போன்களை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் மகன்களை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.