14 வயது மாணவன், அரசுப் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை.
கர்நாடகாவில் 14 வயது தனியார் மாணவன் ஒருவர், அரசுப் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள அன்வாரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கங்கண்ணா(14). தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்த இவர், அதே கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாணவர் கங்கண்ணா, வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார். ஆனால் அவர் தனது பள்ளிக்கு செல்லவில்லை.
மாறாக அங்குள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பள்ளிக்கு செல்ல விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மாணவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.