24 மணிநேர உண்ணாவிரதம் நல்லதா?
ஒரு நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்தால், உடல்நிலை பாதிக்கப்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் உடலில் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதுடன், குறிப்பாக ஆற்றலை பயன்படுத்தும் வழிமுறையில் தாக்கம் ஏற்படுகின்றது.
அதிகப்படியாக கலோரிகள் நிறைந்த டயட்டை பின்பற்றுவதால் நாள்பட்ட வளர்சிதை மாற்ற அழற்சி நோய்க்குறி ஏற்படும் என்றும், பார்க்கின்ஸன், அல்சைமர் போன்ற பல தொற்றா நோய்கள் வருவதற்கு இதுதான் அடிப்படை காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், இதில் கலந்து கொண்ட தன்னார்வலர்களை 500 Kcal நிறைந்த உணவை சாப்பிட வைத்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு அவர்களை எந்த உணவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வைத்துள்ளனர்.
பின்பு அடுத்த நாள் மீண்டும் அவர்களுக்கு 500 Kcal உணவுகள் அளிக்கப்பட்டு ரத்த மாதிரிகளை சோதனை செய்து பார்த்த போது, விரதம் இருக்கும் சமயத்தில் இண்டர்லூகின் 6 பீட்டா குறைவாகவும் அராக்கிடோனிக் ஆசிட் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.
அதாவது இரண்டு பயோகெமிக்கல் மாறுதல்கள்தான் விரதம் இருக்கும் சமயத்தில் வளர்சிதை மாற்ற அழற்சியை குறைப்பதற்கு காரணமாக இருந்துள்ளது.
ஒருவர் விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருடைய உடலுக்கு சக்தி தேவை. இதன் முக்கிய ஆதாரமான குளுக்கோஸ் என அழைக்கப்படும் சர்க்கரை, பொதுவாக தானியங்கள், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் மற்றும் இனிப்புகள் போன்ற கார்போஹைடரேட் நிறைந்த உணவுகளிலிருந்து கிடைக்கின்றன.
உடம்பிற்கு தேவைப்படும் ஆற்றலை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் சரியாக அளிக்கையில், கல்லீரலும் தசைகளும் கூடுதல் குளுக்கோஸை க்ளைகோஜன் என்ற வடிவத்தில் சேமித்துக் கொண்டு, உடம்பிற்கு தேவையான தருணத்தில் ரத்தத்தில் வெளியேற்றுகின்றது.
ஆனால் விரதம் இருக்கும் போது இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது. கல்லீரல் தன்னிடம் இருக்கும் அனைத்து க்ளைக்கோஜனையும் 18 முதல் 24 மணி நேரம் வரை பயன்படுத்துகிறது.
ஆம் உடலுக்குள் கார்போஹைட்ரேட் வராததால், கொழுப்பை பயன்படுத்தி தனக்கான குளுக்கோஸை உடல் உருவாக்குகின்றது. ஒரு கட்டத்தில் இந்த ஆற்றல் தீர்ந்து போனால், அந்த விரதநிலை தீவிரமாக மாறிவிடுகின்றது.
இந்த சமயத்தில் குறிப்பிட்ட நபரின் மெட்டபாலிஸம் மெதுவாகி, உடல் தனக்கான ஆற்றலுக்காக அவரின் தசைகளை எரிக்க தொடங்குகிறது.
ஆனால் 24 மணி நேர உண்ணாவிரதம் எடுப்பவர்கள் வேறு எந்த உடல்நலக் கோளாறு இல்லாமல் இருந்தால், தாராளமாக உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம் என்றும் எந்தவொரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.