25 நாட்களில் தண்டு கீரையை சாகுபடி செய்யும் வழி முறைகள் என்னென்ன …?
அன்றாட உணவில் நாம் முக்கியமாக உண்ணக் கூடிய மிகுந்த சத்தான உணவுப் பொருள்களில் கீரையும் அடங்கும். அறிவியல்ரீதிப் படி, ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் 300 கிராம் காய்கறிகளைக் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். இவ்வாறு சத்து மிக்க காய்கறிகளை நாம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையைத் தரும்.
தண்டுக்கீரையை வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்கலாம். இதற்குக் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
வீட்டில் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை வளர்க்க தொட்டி அல்லது குரோ பேக்-ஐப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு தண்டுக்கீரையை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
நல்ல அகலமா குரோ பேக் அல்லது தொட்டியை எடுத்துக் கொண்டு அதில் செம்மண்ணைக் கொட்டி வைக்க வேண்டும்.
விதை விதைப்பதற்கு முன், மண்ணை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள குப்பை, கல் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின், சிறுது விதைகளை மண்ணின் மேல்பகுதியிலேயே தூவி விட வேண்டும். விதை சிறியதாக இருப்பதால், மண்ணின் ஆழத்திற்குச் செல்லும் போது, கீரை வளர்வதற்கு சிரமமாகவும், அதிக காலமும் எடுத்துக் கொள்ளும்.
தண்ணீரை செடிக்கு அடிக்கும் போது அப்படியே வேகமாக ஊற்றக் கூடாது. செடியின் மேற்பகுதியில், தண்ணீரை ஸ்பிரே அடித்துக் கொள்ள வேண்டும்.
செடி வைத்து முதன் முதலில், நீர் ஊற்றும் போது ஓரளவுக்கு அதிகமாக தண்ணீர் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம். அதன் பின், செடி வளரும் காலங்களில் ஈரப்பதமாக வைத்திருந்தால் போதுமானது.
பொதுவாக கீரைகள், வெப்பப் பகுதி மற்றும் குளிர்ச்சியான பகுதி இரண்டிலுமே பயிரிடலாம். அதன் படி, தரைப்பகுதியில் பயிரிடும் போது ஒரு ஹெக்டேருக்குப் பயிரிட 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
மேலும், கீரைகள் பொதுவாகவே நல்ல சூரிய ஒளியில் வளரக் கூடியவையாக அமையும். அவ்வாறு, 25-30 செல்சியஸ் அளவிற்கு இருந்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
இதற்கிடையில், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை 10.மிலி முதல் 15மிலி வரையிலான தேமோர் கரைசல் செடிக்கு கொடுக்கலாம்.
25 நாள்களிலேயே நன்றாக தண்டு கீரை செடி செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காணலாம்.
கீரையில் வரும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்
கீரையில் பொதுவாக, இலைப்புள்ளி நோய், இலைத் தின்னிப் புழு போன்ற நோய்கள் இருக்கின்றன.
இலைத்தின்னிப் புழு
இதில் இலைத் தின்னிப் புழு கீரைகளின் இலைகளை அதிகம் பாதிக்கக் கூடிய நோயாகும். கீரைகளை இவற்றிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு, ஒரு எக்டர் வரை வைத்திருக்கும் செடிக்கு, 75 கிராம் வீதம் நவலூரான் 10.இ.சி மருந்தைத் தெளிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இலைப்புள்ளி
இலைப்புள்ளி நோய் ஏற்படும் சமயத்தில், ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு கிராம் கார்பெண்டாசிம் என்ற வீதத்தில் எடுத்துக் கொண்டு கலந்து செடிக்குத் தெளிக்க வேண்டும். குறிப்பாக செடிக்கு சல்பர் கலந்த மருந்தினைத் தெளிக்கக் கூடாது.
தண்டுக்கீரையினை சுமார் 35 முதல் 40 நாள்களில் வேருடன் சேர்த்து பறிக்கலாம்.