3வது முறையாக நீட் தேர்வில் தோல்வி… மாணவி தற்கொலையால் கதறி அழும் தாய்!

September 8, 2022 at 1:44 pm
pc

நீட் தேர்வால் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயலை சேர்ந்த ஆசிரியையின் மகள் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து இருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமுல்லைவாயல் அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா. இவர் ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் லஷ்ணா ஸ்வேதா (19). கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடித்து இருந்தார். இவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை. 

இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை 3-வது முறையாக லஷ்ணா ஸ்வேதா எழுதினார். எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். நேற்று நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் லஷ்ணா ஸ்வேதா தற்போதும் தேர்ச்சி பெறவில்லை. 3-வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் லஷ்ணா ஸ்வேதா மிகவும் மனம் உடைந்தார். இநிலையில், மகள் லஷ்ணா ஸ்வேதாவுக்கு அமுதா ஆறுதல் கூறினார். அடுத்த நீட் தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினார். எனினும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி லஷ்ணா ஸ்வேதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. 

நேற்றிரவு வழக்கம்போல் தாயும், மகளும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த மாணவி லஷ்ணா ஸ்வேதா திடீரென அறையில் உள் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதிகாலை 3.30 மணியளவில் தாய் அமுதா எழுந்து பார்த்தபோது மகள் லஷ்ணா ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார். அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். மகளின் தற்கொலையால் அவரை டாக்டராக்கும் நம்பிக்கையில் இருந்த அமுதா நிலை குலைந்து போயுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website