60 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க அம்பாசிடர் கார் – இந்தியாவில் மீண்டும் கால்பதிக வருது
இந்திய கார் சந்தையின் முடிசூடா மன்னனாக விளங்கிய அம்பாசிடர் கார் மீண்டும் களமிறங்க உள்ளது.60 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்த அம்பாசிடர் வாகனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முகமாக விளங்கியது. கார் என்றாலே அம்பாசிடர் கார்தான் என்று சொல்லும் அளவிற்கு இந்தியா முழுமைக்கும் நீக்கமற நிறைந்திருந்தது.
1954ம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வாகனம் அம்பாசிடர் கார். மிகவும் உறுதியான வாகனமாக விளங்கிய அம்பாசிடர் இந்திய குடும்பங்களின் வாகனமாக மட்டுமின்றி அரசியல் தலைவர்களின் ஆஸ்தான காராகவும் விளங்கியது.
1990ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வருகைக்கு பின்னர் அம்பாசிடர் காரின் மதிப்பு குறைய தொடங்கியது. புதிய கார்களின் ஸ்டைல், வசதிகள் போன்றவற்றிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பாசிடர் இந்திய ஆட்டோமொபைல் ரேஸில் பின்தங்கியது.
ஹிந்துஸ்தான் நிறுவனம் 2014ம் ஆண்டுடன் தனது அம்பாசிடர் கார் தயாரிப்பை நிறுத்தியதுடன் அந்த மாடலை பிரெஞ்சு கார் நிறுவனமான பியூஜியோட்டிற்கு விற்பனை செய்தது. வீல்ஸ் ஆப் இந்தியா (wheels of india ) என்று பெருமையாக வலம் வந்த அம்பாசிடர் இந்திய நிறுவனத்தை விட்டு விலகியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தற்போது பியூஜியோட் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க விரும்பும் சூழலில், அதற்கு அந்த நிறுவனம் கையில் எடுத்துள்ள ஆயுதம் அம்பாசிடர். ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் கைகோர்த்து மீண்டும் அம்பாசிடர் காரை களமிறக்க முடிவெடுத்துள்ளது பியூஜியோட். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனமாக இது களமிறங்க இருப்பது கூடுதல் சிறப்பு.
நவீன வசதிகளுடன் மற்றும் புதிய டிசைனில் களமிறங்கும் அம்பாசிடர் காரின் வேலை 6 முதல் 10 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரக அம்பாசிடர் காரன் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் இந்திய சந்தையில் கால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.