9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16-வயது மாணவி!

September 23, 2022 at 7:01 pm
pc

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமிபாய். இந்த தம்பதியின் மகள் ரக்‌ஷிதா (வயது 16). இவர் சிக்கமகளூருவில் உள்ள பசவனஹள்ளியில் உள்ள அரசு பி.யூ. 

கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ரக்‌ஷிதா கல்லூரிக்கு செல்ல அங்கு வந்த பஸ்சில் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கிவிட்டார். இதனால் கால் தவறி பஸ்சில் இருந்து தவறி விழுந்த அவர், தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ரக்‌ஷிதா மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக அவர்கள், மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு வரவேற்பு தெரிவித்த டாக்டர்கள் மாணவி ரக்‌ஷிதாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று மதியம் அறுவை சிகிச்சை மூலம் ரக்‌ஷிதா உடலில் இருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன.

இதில் இதயம் பெங்களூருவுக்கும், மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ரக்‌ஷிதாவின் இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மற்ற உடல் உறுப்புகள் மணிப்பாலில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 

இதனால் 9 பேர் மறுவாழ்வு பெற்றதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரக்‌ஷிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் ரக்‌ஷிதா படித்த கல்லூரிக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர். 

ஏராளமான மாணவ-மாணவிகள் ரக்‌ஷிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரக்‌ஷிதாவின் உடல் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரக்‌ஷிதா இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்ததை நினைத்து பெருமைப்படுவதாக அவருடன் படித்த மாணவ-மாணவிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website