நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையைத் தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் எனக் கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால், வழக்கைத் தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்காத நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.