நடிகர் விமலால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர் குடும்பம்!
நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளரின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக தயாரிப்பாளரின் மகள் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விமல் நடிப்பில் மன்னர் வகையறா என்ற படத்தை அவர் தயாரித்துள்ளார். இதற்காக 1.73 கோடி ரூபாய் பணத்தை கணேசன் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செலவு செய்த பணத்தை தருவதாக உறுதி அளித்த விமல் பணத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கடன் வாங்கியவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வந்த கணேசன் அந்த மன உளைச்சலிலேயே மரணமடைந்து விட்டார்.
இந்நிலையில் அவரது மகள் ஹேமலதா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விமலை நம்பி 1.73 கோடி ரூபாயை இழந்ததால் தனது தந்தை இறந்துவிட்டதாகவும் தனது தாயும் தற்போது உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகிவிட்டதாகவும் கதறி அழுதுள்ளார்.
இந்த தகவல் குறித்து விமல் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.