கணவர் குடும்பத்தினரால் பல முறை பாலியல் கொடுமை -தப்பி வந்த 17 வயது பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்.
17 வயது சிறுமி ஒருவர் திருமணம் என்ற பெயரில் தான் விற்கப்பட்டதாகவும், கணவரின் சகோதரர், தங்கை கணவர் உள்ளிட்டோரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்த இளம் பெண், கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்த போது அவர் மீது இரயில்வே பொலிசாருக்கு சந்தேகம் வந்ததால், அவரை பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து, விசாரிப்பதற்காக குழந்தைகள் நல ஆணையத்தில் இருந்து அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.
குழந்தைகள் நல ஆணைய தலைவர் கனீஸ் பாத்திமா அந்த சிறுமியிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.
அதில், தியோரியாவைச் சேர்ந்த நான் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தேன். எனது விருப்பத்தை மீறி எனது பெற்றோரும், தாய்மாமாவும் கட்டாயப்படுத்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் திகதி எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பிறகு என்னை கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை எனது கணவரிடமும், மாமனாரிடமும் தெரிவித்த போது திருமணம் என்ற பெயரில் உன்னை உன் தாய்மாமாவிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம்.
இதனால், அவர்கள் (கணவரின் உறவினர்கள்) சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
இருப்பினும் இதற்கு நான் இதற்கு உடன்பட மறுக்கவே என்னை ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்தனர். அங்கு கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாதக்கணக்கில் பல முறை என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர்.
அதோடு விடாமல், பாலியல் வன்புணர்வு செய்ததை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர். அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து ஒருவழியாக தப்பித்து தியோரியாவில் உள்ள எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.
உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறியபோது அவர் மறுத்துவிட்டார். என் மாமா எனக்கு உதவ மாட்டார் என தெரிந்து அங்கிருந்து ஏப்ரல் 7-ஆம் திகதி தப்பித்து அடுத்த நாள் இரயிலில் ஏறி தப்பித்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.