தோழியைக் கொன்று உடலைக் கடலில் வீசிய நண்பன்.. அதிர்ச்சி காரணம்!

May 2, 2022 at 1:02 pm
pc

மும்பையில் உள்ள வர்சோவாட கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டையில் இளம் பெண்ணின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. பிறகு அங்கு சென்ற போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து, போலிஸார் விசாரணை செய்தனர். 

இதில் உயிரிழந்த பெண் சோனம் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் சாக்கு மூட்டையைத் தூக்கி வருவது பதிவாகியிருந்தது. இதையடுத்து சபித் அன்சாரி என்ற அந்த நபரைப் பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. 

சோனம் ஸ்ரீகாந்தும், சபித் அன்சாரியும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். இதனால் அன்சாரி தோழி சோனத்திடம் ரூ. 5 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து கொடுத்த பணத்தை சோனம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அன்சாரி பணத்தைக் கொடுக்காமல் போக்குகாட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சோனம் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், போலிஸில் புகார் கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார். 

இதனால் அன்சாரி ரூ. 2 ஆயிரம் மட்டும் பணத்தைக் கொடுத்து மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுக்க வேண்டும் என சோனம் வலியுறுத்தியதால் நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்சாரி, தோழி சோனத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பிறகு அவரது உடலை சாக்கு மூட்டையில் அடைத்து கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அன்சாரியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொடுத்த கடனை கேட்டதால் தோழியையே இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website