மணலி “டு” தேனாம்பேட்டை, ஒரே இரவில் 18 செல்போன்களை வழிப்பறி செய்தவன் கைது !!
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலான பார்க் ஹோட்டலில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். பின்னர் தப்பி சென்ற இருவரையும் இவர்களது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
செல்போன் பறித்து தப்பி சென்ற வாகனத்தின் மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியதால் கீழே விழுந்துள்ளனர். இதில் செல்போனை பறித்து சென்ற ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்றொரு திருடன் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.
பிடிபட்ட நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் நடத்திய விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (22 வயது) என்பதும், மணலி பகுதியிலிருந்து ஒரே இரவில் 18 பேரிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பிச் சென்ற கூட்டாளி கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலாஜியிடம் இருந்த 18 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.