தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான டிக்கெட்டில் சலுகை -மத்திய அரசு தீவிரம்.
இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான டிக்கெட்டில் சலுகை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தான் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 3ஆவது அலையை எதிர்கொள்ளும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உள்நாட்டு விமான பயணத்தில் தளர்வுகள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
விமான நிலையங்களில் பயணம் மேற்கொள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மாநில அரசுகளுடன் பேசி முடிவு செய்ய வேண்டும் என்பதால், ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒடிசா, மகாராஷ்டிரா, மேகாலயா போன்ற மாநிலங்கள், கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் தங்கள் மாநிலங்களுக்கு வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளன.
இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் விமான நிறுவனங்கள் முறையிட்டன. எனவேதான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று தேவைப்படாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
அதே போல் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விமான டிக்கெட்டில் சலுகை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.