‘டெல்டா’ வகை வைரஸ், தற்போது மேலும் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ ஆக உருமாற்றம்.
இந்தியாவில் 2வது அலை கோவிட் பரவலுக்கு காரணமாக உள்ள ‘டெல்டா’ வகை வைரஸ், தற்போது மேலும் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ ஆக தோன்றியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வைரஸ் பல விதமாக உருமாற்றம் அடைந்து சில நாடுகளில் 2வது,3வது அலைகளாக உருவெடுத்தது. இந்தியாவிலும், டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கொரோனா வைரஸ் 2வது அலையாக உருவெடுத்து, அதிவேகமாக பரவியது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தது. தற்போது ஓரளவு பாதிப்புகள் குறைந்துவரும் சூழலில், டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்’ ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய உருமாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் டில்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார். தற்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ள டெல்டா பிளஸ் வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் இந்த வைரஸை தொடந்து கண்காணித்து வருவது அவசியம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.