10 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் தொடர் சேவை செய்து வரும் பெண் செவிலியர் – குவியும் பாராட்டு…!!!
சட்டீஸ்கரில் செவிலியர் ஒருவர் தொலைதூர கிராம மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தொடர் சேவை செய்து வருகிறார்.
இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் மருத்துவ உதவிகளை பெற அதிக கி.மீ பயணம் செய்து காடுகளை கடந்து வரவேண்டியுள்ளது. காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக செல்ல பெரும்பாலானோர் முன்வருவதில்லை.
இந்நிலையில் சட்டீஸ்கரில் வசிக்கும் 55 வயதான முக்தலி டிர்கி என்ற செவிலியர், சூர் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார். பல்வேறு தடைகளை தாண்டி அக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை வழங்கி வருகிறார்.
மருத்துவம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் தன்னால் இயன்றதை செய்து வருகிறார்.காடுகள் வழியாக பயணம் செய்து இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். அதனால் தனியாக செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால், துணைக்கு அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் யாரையாவது அழைத்து செல்கிறார். வாரத்தில் இரண்டு முறை சூர் கிராமத்திற்கு
மக்களுக்கு உதவி செய்கிறார்.
அவரது சேவை குறித்து ஊர் மக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு என்ன தேவை இருந்தாலும், அதனை செவிலியர் பூர்த்தி செய்து விடுவார். கிராமத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என தெரிந்தால், உடனடியாக மருந்துகளை எடுத்து வந்து கொடுப்பார். உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வார்’ என்று கூறி நன்றி தெரிவித்துள்ளனர்.
இப்பகுதி பெண்களின் பிரசவத்திற்கும் முக்தலி டிர்கி உதவி செய்து வருகிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், செவிலியர் தனது பணியை விடவில்லை. கிராம மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அவரது சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.