இஸ்லாமியர்களுக்கு தமிழர்கள் துணை நிற்க வேண்டும்! சீமான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்று வரும் ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான அரசாட்சி தமிழர்கள் மீது இன அடிப்படையிலும், இஸ்லாமியர்கள் மீது மத அடிப்படையிலும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது கொடும் அரசப்பயங்கரவாதச்செயலின் வெளிப்பாடாகும்.
அந்நிலத்தில் வாழும் இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கப்படி ஆடை அணிவதற்கும், கல்வி கற்பதற்கும் தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிரான மதத்தீவிரவாதமாகும். சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான இத்தகைய மத ஒடுக்குமுறைகளும், இன ஒதுக்கல் கொள்கைகளும் வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் மத உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகப் போராடும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகத் தமிழர்கள் துணைநிற்க வேண்டும் எனவும், மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் இனத்தால் தாங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் குடிகள் என்பதையுணர்ந்து இஸ்லாமியர்கள் தமிழர்களாய் திரண்டு இத்தகைய அநீதிகளுக்கு எதிராக இனமாய் ஓரணியில் நிற்க வேண்டும்..
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.