ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடும்: சீமான்!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
செப்டம்பர் 15 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள், இதுவரை ஆண்ட, ஆள்கின்ற கட்சியினர் எவரும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களைக் கடந்த சட்டமன்றத்தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம்.
அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான்.
தமிழ்த்தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு, வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழமைபோல மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்துக் களமிறங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.
அனைத்து உள்ளாட்சி இடங்களுக்குமான வேட்பாளர்கள் தேர்வை உடனடியாக இறுதி செய்து, அனைவரின் வேட்புமனுக்களையும் உரிய முறையில் விரைந்து பதிவு செய்யச் செய்யவேண்டும் என மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவுறுத்துகிறேன்.
பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.
மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.