‘தமிழ் மொழி மீதும் தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி’ – அமித்ஷா புகழாரம்!
தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட பிரதமர் மோடியை விட சிறந்த தலைவர் இல்லை என்று மத்திய உள்துறை அமித்ஷா பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக – பாஜக- பாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றார். அவரை தொடர்ந்து மோடியின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.
தமிழகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கான கூட்டணி அதிமுக – பாஜக கூட்டணி. தமிழ் மொழி மீதும் தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.பாஜக, அதிமுக நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. பிரதமர் மோடி சோனியா காந்தி, ஸ்டாலினை போன்றவர் இல்லை. தமிழக மக்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். தமிழக மக்கள் பற்றி மோடியை விட யாரும் அதிகமாக கவலைப்பட முடியாது. திமுகவும் காங்கிரஸும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாது என்று தெரிவித்தார்.