பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்: வலுக்கும் எதிர்ப்பு!
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெண்ணிற உடை, நீண்ட தாடி, ஒரு கையில் எழுத்தாணி மறு கையில் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கும் திருவள்ளுவரைதான் நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
இதைத்தான் தமிழக அரசும் அங்கீகரித்துள்ளது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8ம் வகுப்பு இந்தி புத்தகத்தில், திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம் பூசப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயலினை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை, எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் அதனை ஏற்காது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு சமூகத்தை சேர்ந்தவராக திருவள்ளுவரை அடையாளப்படுத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவருக்கு வர்ண அடையாளம் பூசுவது என்பது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக திருத்துங்கள் இல்லையேல் திருத்துவோம் எனவும் சிபிஎஸ்இ பாடநூலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.