அட கடவுளே – தமிழகத்தை தாக்கும் ‘பார்வோ வைரஸ்’!
மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், ‘பார்வோ வைரஸ்’ தொற்றால், வீட்டு செல்ல பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசி போடாததே இதற்கு காரணம் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.காற்றின் வாயிலாக வேகமாக பரவும் ‘கெனைன் பார்வோ வைரஸ்’ தொற்று, விலங்குகளை மட்டுமே தாக்கும்; நாய்களுக்கு அதிகம் பரவும்.தொற்றால் பாதிக்கப்படும் நாய்களுக்கு, சோர்வு, வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து பவரும் வைரஸ், பிற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் பாதிப்பில் இருந்து பிராணிகளை காப்பாற்றலாம்.பொதுவாக நாய்களுக்கு, மூன்று தவணை பரவுது வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பரவலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர், தங்களது செல்ல பிராணிகளை கவனிக்க இயலவில்லை.இதன் விளைவாக, நாய்களுக்கு, பார்வோ வைரஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் கூறியதாவது: பார்வோ வைரஸ் பெரும்பாலும், மழைக் காலங்களில் வேகமாக பரவக்கூடியது. ஜூன், ஜூலை, நவ., டிச., மற்றும் ஜனவரி மாதங்களில், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.அந்த காலக்கட்டத்தில் சென்னையில், தினமும், 130 முதல், 150 நாய்கள் வரை, பார்வோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகிறது.
தற்போது, அந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறியதே, அதற்கு முக்கிய காரணம். ரேபிஸ் தடுப்பூசி, 50 ரூபாய்க்கு குறைவாகவும், பார்வோ வைரஸ் தடுப்பூசிகள், 300 ரூபாய்க்கு மேலும் விற்கப்படுகிறது. கொரோனா பொது முடக்கத்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பலர், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போட தவறிவிட்டனர்.
பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், நம்மையே நம்பியிருக்கும் உயிர்களையும் காக்க வேண்டும்.எனவே, செல்ல பிராணிகளுக்கு முறையான தடுப்பூசி செலுத்த வேண்டும்.நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.