காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கும் சாவிகள் – தேடி அவதிப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் …!!!
காவல்நிலையத்தில் மொத்தமாக குவிந்து கிடக்கும் சாவிகளில் தங்கள் பைக்கின் சாவிகளை உரிமையாளர்கள் தேடி எடுக்கும் படம் வைரலாகி வருகிறது
ஊரடங்கு காலத்தில் வெளியே வந்த லட்சக்கணக்கான பைக்குகள் போலீசாரால் தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுமார் 500 முதல் 1,000 பைக்குகள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடியும்.
போலீசாரால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு பைக்குகள் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்படும். அதன் பின்னர் குறைந்தது பத்து நாட்களுக்கு பைக்கை திருப்பி கொடுக்க மாட்டார்கள்.
குறிப்பிட்ட நாள் முடிந்து காவல் நிலையத்திற்கு வந்து அபராதத்தை செலுத்தும் உரிமையாளர்கள் தங்கள் சாவியை கண்டுபிடிப்பதுதான் சிக்கலான விஷயம். கைப்பற்றப்பட்ட அத்தனை பைக்குகளின் சாவிகளும் காவல்நிலையத்தில் குவியலாக கிடக்கின்றன.
இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள சாவிகளின் படம் என்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதேபோன்றுதான் அனைத்து காவல் நிலையங்களிலும் சாவிகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் சென்று தன்னுடைய சாவியை தேடி எடுப்பது பெரும்பாடு தான்.
இதுகுறித்து சென்னையில் உள்ள போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ஏதோ ஒரு சில காவல் நிலையங்களில் இப்படி இருக்கலாம். ஆனால் பொதுவாக எல்லா இடங்களிலும் இப்படி இல்லை என்றார்.
ஒரு நாளைக்கு 50 முதல் 100 பைக்குகளை திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் குறிப்பிட்ட சாவிகளை எடுத்து பைக் நம்பருடன் துண்டு சீட்டு எழுதி மேஜையில் வைத்து விடுவோம் அவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.