தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரசார பயணத்துக்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறார்.
அவர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் எட்டயபுரம் மெயின் ரோடு, வடக்கு திட்டங்குளத்தில் காலை 8 மணிக்கு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், வணிகர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.