கம்பம் அருகே அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் கார் மீது நடந்த தாக்குதலால் பரபரப்பு !!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்து. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தேனி எம்.பி.யும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் வருகை தந்தார். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அவர் வாக்களித்ததை கண்டித்தும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு கொடி காட்டவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், சுமார் இரவு 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி. காரில் வருகை தந்தார். அவர் காரை தொடர்ந்து பின்னால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் கார்கள் வந்தன. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அதிமுக சார்பில் தனது ஆதரவை தெரிவித்துஇருந்தார். அதை எதிர்த்து சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து ரவீந்திரநாத்குமார் காரை முற்றுகையிட்டனர். ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த சூழலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி தேவதானப்பட்டி தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு, சாலைமறியலில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கையை கூறி கோஷமிட்டனர்.
இதைக் கண்டித்து அதிமுகவினரும் கோஷமிட்டவர்களை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கம்பம் தேனி சாலையில் பகுதியில் பரபரப்பு நிலவியது.