இந்திய போர் வீரனின் தைரியத்தை உலகிற்கு சொல்லாமல் செயலில் காட்டிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123 வது பிறந்தநாள்
நேதாஜியின் சிறந்த வரிகள்:
ஒரு கொள்கைக்காக ஒரு தனிமனிதன் உயிர் துறக்கலாம். ஆனால் அவன் இறப்புக்குப் பிறகு அந்த கொள்கை ஆயிரம் உயிர்களாக அவதாரமெடுக்கும்
ரத்தம் கொடுங்கள். சுதந்திரம் பெற்றுத் தருகிறேன். இரத்தம் மட்டுமே நீங்கள் சுதந்திரம் பெறுவதற்கான விலையாக இருக்க முடியும்.
அநீதியோடு சமரசம் செய்து கொள்வதை விட பெருங்குற்றம் வேறொன்று கிடையாது என்பதை ஒருபோதும் மறவாதே.
வரலாற்றில் எந்த உண்மையான மாற்றமும் விவாதங்களால் விளைந்ததில்லை.
”நேதாஜி” என்று அன்போடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸிற்கு இன்று 123வது பிறந்த நாள். இந்திய சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களை எழுச்சி கொள்ள செய்த மாவீரர். இந்திய வரலாற்றில் ஒப்பற்ற வீர நாயகனாக இடம்பிடித்துள்ளார்.
தமிழர்களின் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்த அவர் அடுத்த ஜென்மத்தில் தமிழராய் பிறக்க ஆசை கொள்வதாக தெரிவித்தார். போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்தியானவை. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு முக்கிய காரனமாக அமைந்தது. வீட்டுச் சிறையில் கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட்ட போது, ஜெர்மனியிலிருந்து முழங்கினார் சுபாஷ் , மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் நேதாஜி பெயருக்கு ஸ்பெஷல் இடம் இன்றும் உண்டு.
தனது கொள்கையை ஒவ்வொரு இளைஞர்களையும் தனது சீரிய பேச்சால் சுதந்திர போரில் பங்குபெற வைத்தார். சுபாஷ் சந்திரா போஸின் கொள்கையை பார்த்து வியந்த ரவீந்திரநாத் தாகூர் நேதாஜி என்ற பட்டத்தை வழங்கினார். மக்களின் மனதில் சுதந்திர எண்ணத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக சுபாஷை பிரிட்டிஷ் அரசு சிறை பிடித்தது. சிறையில் இருக்கும் போதே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி.
1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜிக்கு எதிராக காந்தி வேட்பாளரை களமிறக்கினார். அந்த தேர்தலில் நேதாஜி வெற்றி பெற்ற பிறகு, இது தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. இந்திய வரலாற்றில் ஓர் அழியா சரித்திரமாகிய நேதாஜி சுபாஷ் சந்திரா போசின் இறப்பு இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. அவர் இன்று இல்லை என்றாலும் புரட்சியை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் மனத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.