உக்ரைனுக்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

October 11, 2022 at 10:13 am
pc

கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைக்கும் The Kerch பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்களன்று உக்ரைனின் எரிசக்தி, இராணுவம் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்யா தங்களது நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் Lviv, Ternopil, Dnipro, Zhytomyr மற்றும் Zaporizhzhia உள்ளிட்ட நகரங்கள் குறிவைக்கப்பட்டன, தலைநகர் கீவ்வில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சலின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி புடின், ரஷ்யா மீது தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி கடுமையாக இருக்கும் எனவும், ரஷ்யாவிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களின் அளவிலேயே பதில்கள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் உள்ள நகரங்களை குறிவைத்து திங்களன்று நடத்தப்பட்ட கொடூர ஏவுகணை தாக்குதல்கள், ரஷ்ய எல்லைக்கு எதிரான அதன் பயங்கரவாத நடவடிக்கைக்கான பதிலடி என்று விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

மொத்தமாக திங்களன்று உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், நாடு முழுவதும் 60 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், அவர்கள் பீதியையும், குழப்பத்தையும் விரும்புகிறார்கள், அவர்கள் நமது ஆற்றல் அமைப்பை அழிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று காலை 75 ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனை நோக்கி ஏவப்பட்டது. அவற்றில் 41 ஏவுகணைகள் நமது வான் பாதுகாப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன என்று உக்ரேனிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஸ்னி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாலத்தின் மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என உக்ரைன் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website