நமக்கல்

வயது குறைந்த கல்லூரி மாணவரை காதலித்து கரம்பிடித்த பேராசிரியை.!

Quick Share

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா(28). பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் அதே கல்லூரியில் படித்து வரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன் (24) என்ற மாணவனுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. 

இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தெரிந்த இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த 8-ம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலைக்குச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் இருவரும் நேற்று தஞ்சம் அடைந்தனர். அதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார். 

இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்துக்கு வாழ வழி உள்ளதை எடுத்துக் கூறி, மாணவன் பிரவீன், அவரது பெற்றோர்களுடன் கல்லூரி விரிவுரையாளர் மீனாவை அனுப்பி வைத்தனர். 

மாணவனை காதலித்து விரிவுரையாளர் திருமணம் செய்து கொண்டுள்ள இச்சம்பவம் கல்லூரி வட்டாரத்திலும், அந்த பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விதவை பெண்ணை தூக்கி சென்று கொடூரமான முறையில் இரவு 11 மணி வரை கூட்டு பாலியல் பலாத்காரம் ...

Quick Share

நாமக்கல்லை சேர்ந்த 29 வயது விதவைப் பெண் ஒருவர், திருச்செங்கோட்டை சேர்ந்த அவரது நண்பர் ஒருவருடன் கடந்த 19-ந் தேதி, நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இருவரையும் மிரட்டி 1¼ பவுன் செயின் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பறித்துள்ளது. 

மேலும், இருவரையும் அந்த கும்பல் தாக்கியதோடு மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் பயனற்று இருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளது. பின்னர் அந்த கட்டிடத்தில் வைத்து பெண்ணை கொடூரமான முறையில் இரவு 11 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதை அந்தப் பெண்ணின் ஆண் நண்பருடைய செல்போனை பறித்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அதே போனில் வீடியோ பதிவு செய்துள்ளது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 21), வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (21), பெயிண்டர் முரளி (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோர் விதவைப் பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் தலைமறைவாக உள்ள வல்லரசை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே நவீன்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

ராசிபுரம் அருகே பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களந்தாபுரத்தில் 12-ம் வகுப்பு மாணவர் தருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், ‘தனது இறப்பிலாவது தாய், தந்தை ஒன்று சேர வேண்டும் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு; கலெக்டர் போட்ட உத்தரவு…

Quick Share

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கர்ப்பிணியாக இருந்த ரம்யா உடல்நலக்குறைவினால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவினர், உயிரிழந்த ரம்யா வசித்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்தகத்தில், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்தகத்தில் ஆய்வு செய்ய சென்றனர். சம்மந்தப்பட்ட மருந்தகம் பூட்டியிருந்ததையடுத்து, மருந்தக உரிமையாளரை தொடர்பு கொண்டனர். 

மேலும் மருந்தகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகளில், பயன்படுத்திய காலி ஊசிகள், ஊசிக் குழல்கள், மருதம் மருந்தகத்தின் விலாசம் கொண்ட பெட்டிகள் இருந்ததை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். நீண்ட நேரமாகியும் மருந்தகத்தின் உரிமையாளர் வராததையடுத்து, மருதம் மருந்தகம் மார்ச் 31 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பின்னர் அதே நாளில் இரவு சுமார் 10.30 மணியளவில் மருதம் மருந்தகத்தின் மேற்கூரையை மருந்து கடை உரிமையாளர் முத்துசாமி பிரித்து உள்ளே புகுந்து மருந்து மாத்திரைகளை எடுத்து சென்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போது தாய்மார்கள் கருகலைப்பு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பயிற்சி பெறாத மருத்துவர், அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்புமாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் மற்றும் மரணம் ஏற்படுகின்றது. 

தேவையற்ற மற்றும் வேண்டத்தகாத கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம். 7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். மேலும் 10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்கு தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.

எனவே, தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த பிளஸ்-1 மாணவர்.. திட்டிய ஆசிரியை -ரெயில் முன் பாய்ந்து மா...

Quick Share

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி ஆசிரியைகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளி. இவரது மகன் ரிதுன் (வயது 16), இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரிதுன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது சக மாணவியிடம் பேசி கொண்டிருந்த அவர் அந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த வகுப்பு ஆசிரியர் மாணவரை அழைத்து கடுமையாக திட்டியதுடன் அடித்து எச்சரித்தார். மேலும் மாணவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்.

பின்னர் வகுப்பறையை விட்டு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்து தண்டனையும் வழங்கி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவன் ரிதுன் கழிவறைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். அங்கிருந்து பள்ளி காம்பவுண்டு சுவரை தாண்டிய ரிதுன் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றார்.

அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் என்ஜினை பார்த்ததும் வேகமாக ஓடினார். மாணவர் ரிதுன் ஓடுவதை பார்த்த சக மாணவர்கள் கூச்சல் போட்டனர். அதற்குள் ரிதுன் ரெயில் என்ஜின் மீது பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு , துண்டாக சிதறி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம் ரிதுனுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், உடனே பள்ளிக்கு வருமாறு கூறினர். பதறி அடித்த படி பெற்றோர் ஓடோடி வந்து பார்த்த போது மகன் ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்ததை பார்த்து கதறினர்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல உறவினர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இறந்து போன மாணவரின் உடலை எடுக்க விடாமல் மாணவரின் இறப்புக்கு காரணமான ஆசிரியரை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவரின் உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் ஈரோடு ரெயில்வே டி.எஸ்.பி. ஹேமா மற்றும் தாசில்தார் தமிழரசி, டி.எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் ஏற்பட்ட காதல் கடித பிரச்சினையால் ஆசிரியர் கண்டித்ததால் ரிதுன் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் பள்ளி அருகிலேயே மாணவர் தற்கொலை செய்த நிலையில் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும் மாணவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே மாணவர் உடலை பெற்று செல்வோம் எனவும் கூறிய உறவினர்கள் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த ஆதிதமிழர் பேரவை கட்சியினர் மாணவர் சாவுக்கு காரணமான ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இதனால் இரவு 9.30 மணி வரை மாணவர் உடல் தண்டவாளத்திலேயே கிடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து இரவு 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு மாணவரின் உறவினர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ரெயில்வே போலீசார் மாணவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடைய மாணவரை கண்டித்த ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் அந்த ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி பள்ளி, ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டுள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.




You cannot copy content of this Website