முக்கிய செய்தி

சுதந்திர தின அணிவகுப்பில் குழப்பம் – பொலிஸ் அணிகள் வெளியேறின!

Quick Share

சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையில் இருந்து பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் இன்று திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இறுதிப் பயிற்சியில் இருந்து பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அணிகள் விலகியுள்ளன. பொலிஸ் குதிரைப்படை அணியினரை அணிவகுப்பில் இருந்து வெளியேற்றிய சம்பவமே இதற்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தேன்கோன் ஆகியோரிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவ்வாறான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத் தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் பேரணி!

Quick Share

இலங்கையின் சுதந்திர தினத்தன்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.”ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில் சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிமை உள்ளது என்பதை சுயநிர்ணய உரிமை மக்களின் சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது “இவ்வரையறைக்குள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் அன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.உலகெங்கிலும் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரிமைக்குரல் எழுப்பவுள்ள இப் பேரணியானது இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு உயர் முன்பாக ஆரம்பித்து நடைபவனியாக செல்லவுள்ளது.இலங்கை உயர் ஆணைய இல்லத்தின் முன்றலில் இருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகி ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் நிர்வாகத் தலைமையகம் மற்றும் அரச வதிவிடமாக விளங்கும் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கிச்சென்று பின் அங்கிருந்து பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையும்.பேரணியின் நிறைவில் பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் பிரித்தானியப் பிரதம மந்திரி மதிப்புக்குரிய ரிஷி சுனக் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு உள்ள பொறுப்பின் ஆழத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்துஇந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன

நினைவுப்படிகத்தை சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரனுக்கு தண்டம் விதித்த நீதிமன்றம்!

Quick Share

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை 2015 ஆண்டு இடித்து தரை மட்டமாக்கியது தொடர்பான வழக்கில், பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1,500 ரூபாய் தண்டபணமும் 55,000 ரூபாய் நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.பாதிக்கபட்ட தரப்பினர் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ். காரியப்பர், வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்டு மன்று 1,500 ரூபாய் தண்டபணமும் 55,000 ரூபாயட நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.பிரதி வாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுரகுமாரவே முதலிடத்தில்! – ரணிலின் செல்வாக்கு கடும் வீழ்ச்சி.

Quick Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்கவிற்கே தொடர்ந்தும் அதிக ஆதரவு காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்ற மக்களின் மனோநிலையை அறிவதற்காக டிசம்பர் மாதம் இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.ஜேவிபி தலைவர் அனுரகுமாரவுக்கு 50 வீதமான ஆதரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 33 வீத ஆதரவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 9 வீத ஆதரவும் காணப்படுவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது.பொதுஜன பெரமுனவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு 8 வீத ஆதரவு காணப்படுகின்றது.2023 நடுப்பகுதியிலிருந்து அனுரகுமார திசநாயக்கவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. எனினும் டிசம்பரில் வீழ்ச்சி காணப்பட்டது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கான ஆதரவு 2023 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் 3 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு ஆறு வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது ஐஎச்பியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான இளைஞன் திடீர் மரணம்!

Quick Share

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி, விடுவிக்கப்பட்டுள்ளார்.இளைஞனின் திடீர் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகின்றதுடன், இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை ஆக்கிரமிக்க அரசாங்கம் திட்டம்!

Quick Share

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க அரசாங்கம் இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய நேற்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர்.இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது.விமானப் போக்குவரத்து அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப்பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு கோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது.வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது.இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்.

சஜித்துடன் இணைந்த தயா ரத்நாயக்க – சரத் பொன்சேகா காட்டம்!

Quick Share

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டமைக்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தான் சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.ரத்நாயக்கவை இணைத்துக் கொள்வதன் மூலம், ஐக்கிய மக்கள் சக்தி தனது அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்வதைக் குறிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்த தயா ரத்நாயக்க, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரணில் அரசுக்குள் மீண்டும் ராஜபக்ச குடும்பம்! – ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அம...

Quick Share

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப் பிரமாணம் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்தது!

Quick Share

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.இதற்கிடையில், 2024 ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 3.3% ஆக உயர்ந்தது. அது டிசம்பர் 2023 இல் 0.3% ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You cannot copy content of this Website