பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் திருமணம் ஆகாத நிலையில் தந்தையுடனே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் இவரது மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்றும் அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19 ம் தேதி இரவில் தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத்த கல் ஒன்றின் மீது பெரியசாமியின் தலை மோதியதில் பலந்தகாயமடைந்து உயிருக்கு போராடியபின் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இறத்த மகனின் உடலை சாக்கு ஒன்றில் மூட்டையாக கட்டி தோளில் சுமந்து சென்று அருகே உள்ள கீழ்பவானி வாய்காலில் வீசிய பின் வீட்டிற்கு வந்து விட்டார். இச்சம்பவம் நடந்து இரண்டாவது நாளில் காளியப்பன் தனது மகன் பெரியசாமியை காணவில்லை என திங்களூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்காலில் ஆண் உடல் மிதப்பதாக திங்களூர் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது அது காணமல் போனதாக கூறப்பட்ட பெரியசாமி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இறந்த பெரியசாமியின் தலையில் இருந்த காயங்கள் குறித்து அவரது தந்தையிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் தன் மகன் உயிரிழப்பதற்கு நானே காரணம் என ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. இறந்த பெரியசாமியின் உடலை பிரேத பரிசோனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மகனை கொலை செய்த வழக்கில் காளியப்பனை கைது செய்த திங்களூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.