புதுச்சேரி

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு!

Quick Share

தீபாவளியையொட்டி புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி உள்ளார்.

இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது, தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதிலாக ரூ.490 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.16.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செந்நிறமாக மாறிய கடல்: அதிர்ச்சியை கொடுத்த ஆய்வு முடிவு!

Quick Share

புதுவையில் கடந்த 17 ஆம் தேதி திடீரென கடல் நீர் செந்நிறத்திற்கு மாறியது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான ஆய்வு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 17 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் திடீரென பழைய வடி சாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியில் உள்ள கடல் நீர் செந்நிறத்தில் காட்சியளித்தது. மற்ற பகுதியில் கடல் நீல நிறத்தில் வழக்கம் போல் காட்சியளித்த நிலையில், அந்தப் பகுதியில் மட்டும் செம்மை நிறத்தில் மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செந்நிறத்தில் கடல் நீர் காணப்பட்டது. இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்ட பொழுது, ஆரோவில் பகுதியில் மழை பெய்ததால் செம்மண் மேட்டுப்பகுதியில் இருந்த மண் கரைந்திருக்கும். இதனால் செம்மண் நீர் நகர்ந்து கடலுக்குள் சென்றிருக்கும் எனத் தெரிவித்தனர். அந்த மண் கலந்த நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாகத் தெரிகிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு செம்மண் தேங்கி மீண்டும் கடல் பழைய நிலைக்கு மாறும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களின் கருத்து இப்படி இருந்தாலும் மறுபுறம் ஆய்வாளர்கள் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்நிறம் கொண்ட நீர் மாதிரியை எடுத்துச் சென்று ஆய்வு செய்ததில், அதில் நச்சுத்தன்மை வாய்ந்த அலெக்சாண்டரியம் என்ற ஒரு வகை கடல் பாசி வளர்ந்தது தெரியவந்தது. பொதுவாக கிழக்கு கடற்கரைச் சார்ந்த பகுதிகளில் நச்சுத்தன்மை இல்லாத கடல்பாசிகள் வளரும் நிலையில் கடல் மாசு காரணமாக இந்த நச்சுத்தன்மை கொண்ட பாசிகள் வளர்ந்துள்ளது. அதிக நச்சுத்தன்மை கொண்ட நீர் கடலில் கலப்பதால் இவை வளர்வதாகவும் தெரியவந்துள்ளது.

மக்களே உஷார்.. சிக்கன் பிரியாணியில் இருந்த பாத்திரம் கழுவும் ஸ்கிரப் கம்பி..!

Quick Share

புதுவை 45 அடி சாலையில் பிரபலமான பிரியாணி கடை உள்ளது. இங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த மைக்கேல் சிக்கன் பிரியாணி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது, அதில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப் கம்பி இருந்தது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு வந்து உரிமையாளரிடம் முறையிட்டார். கடை உரிமையாளரிடம் அவர் முறையிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் மைக்கேல் கூறுகையில், பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். பின்னர் சாதாரணமாக மன்னித்து விடுங்கள் என கூறுகின்றனர். 

கம்பி வயிற்றுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரியாணி கடை பொறுப்பேற்குமா? பிரியாணி சாப்பிடும்போது என்ன உள்ளது? என பார்த்து சாப்பிடுங்கள். 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிப்பேன் என்றார். ஏற்கனவே சுல்தான் பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.-

1,200 மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை

Quick Share

புதுச்சேரி கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

Quick Share

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் 2023 வரை இந்தியாவின் 56 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களிலும், புதுச்சேரியிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Quick Share

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் சனிக்கிழமை இரண்டு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், தேவையான மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை (04/11/2022) மற்றும் (05/11/2022) இரண்டு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்!! புதுவையில் மிக வேகமாக பரவும் “இன்புளுயன்சா” காய்ச்சல்!! 747 ...

Quick Share

புதுவையில் குழந்தைகளுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

புதுவையில் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதுவரை, 747 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூலி தொழிலாளி வீட்டுக்கு ஒரு மாத மின் கட்டணம்ரூ.12 லட்சம்!! பொதுமக்கள் அதிர்ச்சி

Quick Share

புதுச்சேரியில் வாட்ச்மென் ஒருவரது வீட்டிற்கு ஒரு மாத மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (57). டி.வி மெக்கானிக்கான இவர் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800 க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங் 20 ஆயிரத்து 630. இதற்கு ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது. 

ஆனால் இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூபாய் 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என வந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள், சரவணன் வீட்டிற்கு இந்த மாதம் மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 ஆகும். ரீடிங் எடுத்த மின் துறை ஊழியர், தவறுதலாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என குறிப்பிட்டுள்ளார். அதனால் மின் கட்டண தொகை அதிகமாக வந்துள்ளது. அதை சரி செய்து கொடுத்து விடுகிறோம் என தெரிவித்தனர். இந்த மின் கட்டண பில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதியவரை கரம்படித்த இளம்பெண்.. அதிர்ச்சி காரணம்!

Quick Share

புதுச்சேரியை சேர்ந்த முதியவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான அவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது மனைவி இறந்ததில் இருந்து, தனிமையில் வாடுவதாக உறவினர்களிடம் புலம்பியுள்ளார். இதையடுத்து அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 28 வயது பெண்ணுக்கும் அவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முதியவரும் இளம் பெண்ணும் மாலை மாற்றி கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையே பிரான்சு குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து கொண்டால், பிரான்சில் செட்டில் ஆகலாம் என்பதால் அந்த பெண் திருமணம் செய்து கொண்டதாகவும் , முதியவர் தரப்பில் பெண்ணின் குடும்பத்துக்கு 2.5 கோடி வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.

முதியோர் உதவித்தொகை உயர்வு: முதல்வர் அறிவிப்பு.!

Quick Share

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

கடன் தொல்லை-ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சோகம்…

Quick Share

கடன் தொல்லை காரணமாக புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்காரர் வீதியில் ஆட்டோ ஒட்டுநர் தியாகராஜன் அவரது மனைவி செல்வி, 8 வயது மகள் லெட்சுமி தேவி, 5 வயது மகன் ஆகாஷ் ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜனுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை குடும்பத்தினர் வெளியே வரததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் கடன் தொல்லை காரணமாக மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய போதை புள்ளிங்கோகள்!

Quick Share

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு மூன்று மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். கடையின் படிக்கட்டில் நாட்டு வெடிகுண்டு விழுந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திருச்சியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் இந்த மதுபானக் கடையில் சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குபேர் நகரை சேர்ந்த சச்சின், நடேசன் நகரை சேர்ந்த எழில், தென்னல் நகரை சேர்ந்த பிரதாப், கெளதம் ஆகிய நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். 

மதுபோதை தலைக்கேறிய நிலையில், அங்கிருந்த சேர்களை உடைத்துள்ளனர். இதனை சசிகுமார் மற்றும் குமரேசன் ஆகியோர் கேள்வி கேட்டபோது அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சச்சின், எழில், பிரதாப் உள்ளிட்டோர் சசிகுமார் மற்றும் குமரேசனை பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர். 

இதனை அங்கிருந்தவர்கள் தடுத்ததால் 4 பேரும் தப்பியோடிவிட்டனர். ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் நேற்று இரவு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உருளையன்பேட்டை போலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




You cannot copy content of this Website