தமிழகம்

தொடரும் கனமழை: நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை!

Quick Share

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் நாளை நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65). அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.

சோதனையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு போட வந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர்: விக்கிரவாண்டியில் பரபரப்பு!

Quick Share

வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (42). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், ஏழுமலை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கனிமொழிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ஏழுமலை, கனிமொழியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கனிமொழி அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30ம ணியளவில் வாக்களிக்க கனிமொழி வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஆத்திரத்தில் அங்கு வந்த ஏழுமலை, மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கனிமொழியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த கனிமொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் அதிர்ச்சி! கள்ளக்குறிச்சியில் பரவும் எலிக்காய்ச்சல்-7 பேர் கண்டுபிடிப்பு..

Quick Share

கள்ளக்குறிச்சி பகுதியில் சிலருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் எலிக்காய்ச்சல்

கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி அருகில் உள்ள வடதொரசலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  

7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா போன்றவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வந்துள்ளனர்.

பின்னர் கடந்த 3 ஆம் திகதி தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் மருத்துவ முகாமிட்டு இரத்த பரிசோதனை செய்துள்ளனர். 

குறித்த இரத்த பரிசோதனையின் முடிவில் 7 பேர் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது.

உடனே பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் சிகிச்சையின் பின்னர் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஏனையவர்கள் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை!குவியும் வாழ்த்து

Quick Share

2024ம் ஆண்டுக்கான JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்கிற மாணவி வேதிப்பொறியியலும், கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை திருச்சி என்ஐடி கல்லூரியில் பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மானவிகள் என்கிற பெருமையை இருவரும் பெற்றனர்.

மாரடைப்பால் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

Quick Share

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் இன்று (ஜூலை 6) 16 வயது சிறுவன் வழக்கம் போல் காலையில் பள்ளிக்குச் சென்றான். அங்கு, நடந்து சென்றபோது திடீரென சரிந்து விழுந்து மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டீல், அலுமினிய பாத்திரங்களுக்கு ISI முத்திரை கட்டாயம்!

Quick Share

துருப்பிடிக்காத எஃகு (Stainless Stee) மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு ஐஎஸ்ஐ (ISI) முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேசிய தர தரநிலைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத எஃகு மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய நிறுவனம் (BIS) தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BIS சமீபத்தில் சமையல் பாத்திரங்கள் தயாரிப்பது தொடர்பாக சில தரநிலைகளை வகுத்துள்ளது. பாத்திரங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் தொடர்பான பொருட்கள் இதில் அடங்கும்.

497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி

Quick Share

10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

விஜயின் விருது விழா

தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 28 -ம் திகதி நடைபெற்றது.

இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.

மாணவி பேட்டி

இந்நிலையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவிக்கு மாநில அளவில் 3 -வது இடம் பெற்றும், அவருக்கு விஜய் வழங்கும் கல்வி விருது விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதுகுறித்து மாணவி கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நான் 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். பள்ளி மற்றும் மாவட்டத்திலும் முதலிடம் பெற்றேன். மாநில அளவில் 3ஆவது இடம் பெற்றுள்ளேன்.

தேர்வு முடிவுக்கு பின்பு எனது தந்தைக்கு போன் அழைப்பு வந்தது. அப்போது, விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம்.

விஜய்யிடம் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்றார்கள். ஆனால், எங்களுக்கு 10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வரவில்லை. 

பின்னர், நாங்கள் போன் செய்து கேட்டதற்கு ரிஜெக்ட் ஆகிவிட்டீர்கள் என்றார்கள். எதனால் என்னை ரிஜெக்ட் செய்தார்கள் என தெரியவில்லை” என்றார்.    

கள்ளக்குறிச்சி விவகாரம்- “118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர்”

Quick Share

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும், விஷச்சாராயம் குடித்து 229 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

Quick Share

கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் வரை கள்ளக்குறிச்சியில் 32 பேர், சேலத்தில் 22 பேர், புதுச்சேரியில் 6 பேர், விழுப்புரத்தில் 4 பேர் என மொத்தம் 63 பேர் இறந்தனர். குணமடைந்த 87 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கருணாபுரத்தை சேர்ந்த மகேஷ் (40); நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், இறந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

விஷ சாராய விவகாரம் – சிபிசிஐடி முடிவு

Quick Share

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 5க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். முக்கிய நபரான மாதேஷ், மொத்த வியாபாரியான ஜோசப் ராஜா, சின்னதுரை உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 5 நாட்கள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: இதுவரை 6 பெண்கள் உயிரிழப்பு

Quick Share

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஜூன் 26) காலை 62ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 63ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆறு பெண்கள் உட்பட 63 பேர் கொடிய மெத்தனால் கலக்கப்பட்ட விஷச்சாராயத்திற்கு இரையாகியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நபர்களில் தற்போது வரையில் 74 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.




You cannot copy content of this Website