உதயநிதி -நிர்மலா சீதாராமன்மோதல்- நிர்மலா சீதாரமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை: உதயநிதி பதிலடி

December 23, 2023 at 12:35 pm
pc

உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் பேசிய கருத்துக்கு, நிர்மலா சீதாரமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை என்று உதயநிதி பதில் அளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் & உதயநிதி மோதல்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிப்படைந்து மிகவும் சிரமப்பட்டனர். இதனால் நிதி வழங்குவது குறித்து மத்திய மாநில அரசுகள் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கு, “யார் அப்பன் வீட்டு பணத்தையும் கேட்கவில்லை, தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியைத் தான் கேட்கிறோம்” என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். 

உதயநிதியின் கருத்துக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அவரின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவர்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள். அவர்கள் அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா என்று கேட்க முடியுமா? அவர்கள் தாத்தா தமிழ் அறிஞர். அதனால், பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும்” என்றார்.

உதயநிதி பதிலடி

இதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் முதலமைச்சர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். 

சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சர் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். 

ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website