கங்குவாவின் டப்பிங் பணி தொடங்கியது .


நடிகர் சூர்யா நடித்து வந்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் டப்பிங் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.. சூர்யாவின் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதையெல்லாம் பார்க்கும் போது ‘கங்குவா’ திரைப்படம் ரிலீசை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
வித்தியாசமான பல கெட்டப்புகளில் சூர்யா நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் – இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.