கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் எப்படி தூங்க வேண்டும்? கர்ப்பிணி பெண்களுக்கான எச்சரிக்கை பதிவு ….!!

June 27, 2022 at 1:47 pm
pc

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பம் அடைவது எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்குமோ, அதே அளவு சில கடினமான அறிகுறிகளை அனுபவிப்பீர்கள். குழந்தை உருவாகும் நாட்களுக்கு முன்பு நீங்கள் குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உணவு சாப்பிடுவதில் சிரமம், தூங்குவதில் சிரமம் என பல அறிகுறிகள் இருக்கும். ஆனால், இதை அனைத்தும் சமாளித்து நன்றாக குழந்தையை பெற்றெடுக்கும்போது அந்த சிரமம் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

அதிலும், முதல் மூன்று மாதம் இந்த அறிகுறிகளை சமாளிப்பது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல், பல பெண்கள் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் எப்படி தூங்குவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அந்த வகையில், முதல் மூன்று மாத தூக்கப் பிரச்சனைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த ஆலோசனைகளை நாங்கள் சேகரித்துள்ளோம். இதன்மூலம் கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர தேவையான ஓய்வு கிடைக்கும்.

முதல் மூன்று மாத தூக்கமின்மைக்கு காரணம்:

கர்ப்பக்காலத்தில் உடலில் அதிக அளவு புரோஜெஸ்ட்ரோன் இருப்பதால் மயக்க உணர்வை அவ்வப்போது பெண்கள் உணரலாம். இது தூக்கத்தை அதிகரிக்க செய்தாலும், அடிக்கடி தூக்கத்தில் எழுந்திருக்கலாம். மேலும், உடலில் ஏற்படும் அசௌகரியங்களால் நன்றாக தூங்குவதற்கு கடினமாக இருக்கும். கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரனம் புரோஜெஸ்ட்ரான் தான். இது உணவுக்குழாயின் தசைகளை தளர்த்துவதால் இது அஜீரணத்தை உண்டாக்கும். இதையெல்லாம் தாண்டி தூங்கும் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முதல் மூன்று மாதத்தில் தூங்குவது எப்படி?

கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வசதியான தூக்கம் இல்லை என்று முதலில் தோன்றலாம். உங்களுக்கு மல்லாந்து படுப்பது, குப்புறப்படுப்பது தான் பிடிக்கும் என்றால், உங்களுடைய விருப்பங்களை மாற்ற வேண்டிய நேரம் இது. கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு பின்வரும் தூக்க நிலைகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

பக்கவாட்டில் தூங்குங்கள்:

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் தூங்குவது நல்லது. அதாவது, வலது அல்லது இடது பக்கத்தில் தூங்குவது வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். ஆனால், ஒரே பக்கத்தில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. அவ்வப்போது மாறி மாறி படுக்க வேண்டும். இடதுபக்கத்தை தேர்ந்தெடுத்து தூங்குவது நல்லது. ஏனென்றால் வலது பக்கத்தில் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

இடது பக்கம் தூங்குவதன் நன்மை:

பொதுவாக அனைவருமே இடது பக்கத்தில் தூங்குவது நல்லது. அதிலும் கர்ப்பத்தின் எந்த கட்டத்திலும் இடது பக்கமாக தூங்குவது பாதுகாப்பான ஒன்று தான். இது வயிற்றில் கருவின் வளர்ச்சிக்கு பயன் தரக்கூடியது. மேலும், இது நஞ்சுக்கொடிக்கு இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன்மூலம், கர்ப்பக்காலத்தில் கால்கள், கைகள், கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கலாம்.

தலையணை பயன்படுத்துங்கள்:

எந்த நிலைகயில் படுத்தாலும் வசதியான தூக்கம் வரவில்லையென்றால் நீங்கள் கர்ப்பக்காலத்தில் பயன்படுத்துவதற்காகவே தலையணை வாங்கிப்பயன்படுத்தலாம். பக்கவாட்டில் தூங்கும்போது முதுகுக்கு பின்னால் ஒரு தலையணை, இரண்டு கால்களுக்கு நடுவில் ஒரு தலையணை வைத்து தூங்கலாம். தூங்கும் போது மூச்சுத்திணறல் ஏதேனும் எதிர்கொண்டால் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ள தலையணையை பயன்படுத்தி மார்பை உயர்த்தி வைக்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website