கள்ளக்காதலுக்கு இடையூறு- கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!!
பல்லடம் அருகே கடந்த 4ம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் கள்ளகாதல் விவகாரத்தால் இறந்தவரின் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமானது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வந்தார். சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால், தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னர், ஒரு கடை அருகே நின்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இந்த கொலையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது.
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபரான கோபாலின் மனைவி சுசீலா என்பவரும் மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களகா இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாரீஸை திருமணம் செய்து கொள்ள சுசீலா கூறியுள்ளார். மேலும் இடையூறாக உள்ள கணவர் கோபாலை கொலை செய்யலாம் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.
அதன்டி கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியில் இருந்து கொலைக்கு 6 லட்சம் என பேசி கூலிப்படையை வரவழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி கோபால் வேலையை முடித்து வீடு திரும்பும் போது அவர்கள் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரனையில் தெரியவந்தது.
இதனை அடுத்து கோபால் மனைவி சுசீலாவின் கள்ளக்காதலன் மாரீஸ், கூலிப்படையை சேர்ந்த விஜய், மணிகண்டன், உலகேஸ்வரன், மதன்குமார், விநோத் ஆகியோரை காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோபாலின் மனைவி சுசீலாவை தேடி வந்த நிலையில் இன்று பல்லடம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.