தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு காரை வழங்கிய நிறுவனம்!
இந்திய மாநிலம், ஹரியானாவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக காரை வழங்கியதால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஹரியாணா மாநிலம், பன்ச்குலா பகுதியில் மிட்ஸ்கார்ட் (MitsKart) பார்மா சூட்டிக்கல் என்னும் மருந்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே. பாட்டீயா, தனது நிறுவனத்தில் சிறப்பான ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தீபாவளி பரிசாக கார்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, 12 ஊழியர்களையும் தேர்வு செய்தார்.
அவர்களுக்காக புதிய டாடா பன்ச் (Tata Punch) கார்களை பதிவு செய்து வாங்கிய அவர், 12 ஊழியர்களுக்கு ஆளுக்கொரு காரை பரிசளித்தார். முன்னதாக, இந்நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலை செய்த ஒருவருக்கும் டாடா பன்ச் கார் வழங்கப்பட்டது.
இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே. பாட்டீயா கூறுகையில், “என் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை நான் ஊழியர்களாக நினைக்கவில்லை. அவர்கள் நட்சத்திரங்கள். இந்த 12 ஊழியர்களும், விசுவாசமாகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவினார்கள்” என்றார்.
டாடா நிறுவனத்தில் உள்ள மற்ற கார்களை போல பன்ச் காரும் பாதுகாப்பானது. இதனுடைய ஆரம்ப விலை ரூ.6 லட்சம் ஆகும். தீபாவளி பரிசு வாங்கிய பல ஊழியர்களுக்கு இது முதல் கார் ஆகும்.