நயன்தாரா சொன்னது எல்லாமே பொய்.. முதல் முறையாக மனம் திறந்த தனுஷின் தந்தை கஸ்தூரி

3 வினாடி வீடியோவுக்கு ரூ.10 கோடி கேட்பதா என்று நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் தனுஷை கண்டித்திருந்தார். இந்நிலையில் நயன்தாரா குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.. எல்லாமே பொய் என்று மறுத்துள்ளார்.
நடிகை நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமண வீடியோ பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆவணப்படமாக வெளியிடப்படும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா தனது காதல், சினிமா, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் நேற்று வெளியானது முன்னதாக ஆவணப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், அதற்கு தனுஷ் தடையாக இருந்ததாகவும் நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டி கடந்த நவம்பர் 16ம் தேதி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நயன்தாரா கூறுகையில், “பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு (தனுஷ்) எழுதியுள்ளேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜாவின் உறுதுணையோடு, சிறந்த இயக்குனரான உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் இதனை நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.
சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்துள்ளேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.
நெட்டிபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா – பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் (விக்னேஷ் சிவன்) மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
‘நானும் ரவுடிதான்’ படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள் தான். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 வினாடி வீடியோவிற்கு எதிராக வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
என்னுடைய சினிமா பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அதனை அனுமதித்தார்கள். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே உள்ளோம். ‘நானும் ரவுடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான ‘காப்பிரைட்’ காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ‘நானும் ரவுடிதான்’ படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்து கொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே இயலாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. நானும் ரவுடி தான் படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். பின்னர், 2016-ம் ஆண்டு பிலிம்பேர் விழாவில் நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.
எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை தான். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஆனால் அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்” இவ்வாறு நயன்தாரா அந்த பதிவில் கூறியிருந்தார்.
தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம்: நயன்தாராவின் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.. தனுஷ் மட்டுமல்ல அவரது சார்பாக வழக்கறிஞர் உள்பட யாருமே பதில் அளிக்கவில்லை.. அதேநேரம் நயன்தாரா விவகாரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா.. இது பற்றி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில். ” எங்களுக்கு வேலை தான் ரொம்ப முக்கியம். நாங்களே நிற்க நேரம் இல்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் முதுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் அளிக்க எங்களுக்கு நேரமில்லை.. என்னை போலவே என்னுடைய மகனுக்கும் வேலை தான் ரொம்ப முக்கியம்.. தடையில்லா சான்றிதழ் பெற இரண்டு ஆண்டுகள் நயன்தாரா தனுஷ்க்காக காத்திருந்ததாக சொன்னது எல்லாம் பொய்.. இதுபற்றி பேச விருப்பம் இல்லை என்று அந்த பேட்டியில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.. தற்போது இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாகவும், இந்த வாரம் படக்குழு தாய்லாந்து நாட்டின் பாங்காங்கிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.