ஊழல் மோசடி நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபையை கலைப்பதற்கு முழு பாராளுமன்றமும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரேரணை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சபையில் விவாதம் நடத்தி வாக்கெடுப்பதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகள் தொடர்பில் சபையில் நீண்ட விளக்கம் ஒன்றை முன்வைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என தெரிவித்து முழு பாராளுமன்றமும் இணைந்து பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.குறித்த பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்தும் ஆளும் கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவோம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கையை சுமார் ஒரு மணி நேரம் வரை தற்காலிகமாக ஒத்திவைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.அதன் பிரகாரம் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, நாளை இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாக விவாதித்து, இலங்கை கிரிகெட் சபையை உடனடியாக கலைத்துவிடவும் இடைக்கால குழு கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லவும் பிரேரணை நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.