சென்னையில் “Zomato” நிறுவன உடையில் கோழி கறி விற்பனை செய்த நபர் போலீசாரால் கைது…!!!

சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அனுமதியில்லை.
இந்நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணகிநகரை சேர்ந்த சரவணன் என்பவர், டெலிவரி பாய் போல தனியார் நிறுவன ஆடை அணிந்துக்கொண்டு கோழி கறியை திருட்டுத்தனமாக விற்பனை செய்தது, போலீசார் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.