“சேட்டிலைட்’தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்!! குவியும் பாராட்டு

January 17, 2023 at 8:47 pm
pc

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பல்வேறு கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த திட்டத்தின் கீழ், மூன்று கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட சமீபத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இக்குழுவில் திருவள்ளூர் மாவட்டம், சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன்-சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின் மற்றும் கை வண்டூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் – கல்யாணி தம்பதியின் மகள் அனுஜா ஷிவானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இவர்கள் தான் தற்போது இந்தியாவின் 75வது ஆண்டு பவள விழா சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு உருவாக்கி வரும் 75 மாணவர் செயற்கைகோளில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பெற்று இருக்கின்றனர். 

இந்த வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் மற்றும் கைவண்டூர் கிராமங்களை சேர்ந்த மாணவிகள் இவாஞ்சலின் மற்றும் அனுஜா ஷிவானி மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த மாவட்டமும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைத்து வருகிறது. 

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இந்த 2 மாணவிகளுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும், அதுவும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இரு மாணவிகளால் அகத்தியர் என்கிற பெயரில் செயற்கைகோள் உருவாக்கப்பட இருப்பது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. 

இதுகுறித்து, அரசு பள்ளி மாணவிகள் இவாஞ்சிலின், அனுஜா ஷிவானி கூறும்போது, ‘பெரிய விஞ்ஞானிகள் மட்டுமே வந்து செல்லக் கூடிய ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு நாங்களும் சென்றது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. 

அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் எங்களுக்கு பாடம் நடத்தியது பெரிய அனுபவத்தை வழங்கி உள்ளதோடு உற்சாகத்தையும் அளித்தது. செயற்கைகோள் செய்யும் மாணவிகளாக நாங்கள் சென்றது எங்களுக்கு பெருமையாகவே உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ, மாணவிகளுக்கும் போதியப் பயிற்சிகள் மேலும் வழங்கப்பட இருக்கிறது. இதன் பின்னர் எங்களை தனித்தனி குழுக்களாக பிரித்து நாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எங்களிடம் ஒப்படைப்பார்கள். 

இதுநாள் வரை வானத்தில் விமானத்தை வேடிக்கை பார்த்து மகிழ்ந்து வந்த நாங்கள் தற்போது செயற்கைகோளை தயாரிக்க போகிறோம் என்பதை நினைத்தாலே எங்களாலேயே நம்ப முடிய வில்லை. 

எங்களுக்கு இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் மற்றும் கணித ஆசிரியர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். 

இவ்வாறு அரசுப் பள்ளி மாணவிகள் இவாஞ்சிலின், அனுஜா ஷிவானி ஆகியோர் கூறினர். மாணவிகள் இருவரும், திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருவதும், இவர்களில் மாணவி இவாஞ்சலின் ஆட்டோ டிரைவர் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website