நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை… யாருக்குத் தேவை?

August 24, 2022 at 10:49 am
pc

சிலருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாவிட்டாலும், அவர்களுடைய ரத்தசர்க்கரை அளவுகள் நீரிழிவு நோயின் எல்லைக்குள் இருக்கும். இப்படிச் சந்தேகத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு, ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை’ பரிந்துரை செய்யப்படுகிறது. இது எப்படிச் செய்யப்படுகிறது? இவர்கள், முதல் மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு முந்தைய நாள் இரவில் உணவு சாப்பிட்ட பின்பு, பரிசோதனைக்குச் செல்லும்வரை எதையும் சாப்பிடக் கூடாது. 8-லிருந்து 12 மணி நேரம் கழித்து, மறுநாள் காலையில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். முதலில் வெறும் வயிற்றில், ரத்தச் சர்க்கரை பரிசோதிக்கப்படும். இதைத் 

தொடர்ந்து, அவருக்கு 300 மி.லி. தண்ணீரில் 75 கிராம் சுத்தமான குளுக்கோஸ் மாவைக் கலந்து தருவார்கள். அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் அதைக் குடித்துவிட வேண்டும். இதிலிருந்து சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுத்து, சர்க்கரையைக் கணக்கிட வேண்டும்.

அப்போது, ரத்தச் சர்க்கரை அளவுகள் முறையே வெறும் வயிற்றில் 80 முதல் 110 மி.கி./டெ.லி. வரை இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 111 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இல்லை. வெறும் வயிற்றில் 111 முதல் 125 மி.கி./டெ.லி. வரை இருந்தால், அது ‘இம்பயர்டு பாஸ்டிங் குளுக்கோஸ்’. அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்பு உள்ளது. அதாவது, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை- பிரீ டயாபடிஸ். குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 141 முதல் 199 மி.கி./டெ.லி. வரை இருந்தால், ‘இம்பயர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ்’. இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைதான்.

வெறும் வயிற்றில் 126 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்து, குளுக்கோஸ் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு இருக்கிறது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதையும், இனிமேல் அவருக்கு நீரிழிவு வர வாய்ப்புள்ளதா என்பதையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளப் பயன்படும் ஒரு முக்கியமான பரிசோதனை இது. நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இது யாருக்குத் தேவை? நீரிழிவுக்கான அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் இதை செய்துகொள்ள வேண்டும். அறிகுறி எதுவும் தெரியாதவர்கள், 40 வயதில் ஒருமுறை செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொண்டால் போதும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website