பாலியல் புகார் -டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது..
டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான ஜானி மீது, 21 வயது பெண் நடனக் கலைஞர் ஒருவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். “நான் 18 வயது நிரம்பாத நிலையில் ஜானி மாஸ்டர் எனக்கு பாலியல் வன்முறையை மேற்கொண்டார். மேலும், அவரிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்யும் என்னிடம் பலமுறை பாலியல் வன்முறை செய்தார்” என்று அந்த பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
புகார் அளித்த பெண் 18 வயது நிரம்பாத நிலையில் குற்றம் நடந்திருப்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலுங்கானா காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், ஹைதராபாத் அழைத்து வரப்பட்டு, மருத்துவ சோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையிலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும், அதேபோல் ஜனசேனா கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.